Tamil Christian Songs

 தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்



தமிழ் கிறிஸ்தவ பாடல்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்





1. பாமாலை பாடல்கள்

        பாமாலை பாடல்கள் என்பவை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கிறிஸ்தவம் வளரத் தொடங்கிய காலத்தில், வெளிநாட்டவர்களால் சர்வ வல்லமையுள்ள தேவனை ஆராதனை செய்ய , தேவனின் மகிமையை புகழ்ந்து பாடுவதற்கு தங்கள் நாட்டில் பாடிய பாடல்களை ஆங்கிலத்தில் பாடி ஆராதனை செய்து வந்தனர்.  பின்பு அந்த வெளிநாட்டு மிஷ்னெரி மார்கள் தங்கள் நாட்டில் தங்கள் மொழியில் பாடி வந்த கிறிஸ்தவ பாடல்கள் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் மொழிமாற்றம் செய்து, இராகத்தையும், பாடல் வரிகளின் கருத்தையும் மாற்றாமல் மொழிப்பெயர்த்த பாடல்கள் அடங்கிய புத்தகங்களே பாமாலை, ஞானப்பாட்டுகள், சுவிசேஷ கீதங்கள் போன்ற புத்தகங்களாக வெளியிடப்பட்டன.
        ஆங்கில மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பாடல்களை புத்தகங்களில் அச்சு ஏற்றும் போது, அந்த பாடல் எந்த பாட்டு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது, அந்த பாடல் வரிசை எண், மட்டும் பாடல் மெட்டுகள், ஆங்கில பாடலில் முதல் வரி ஆகியவை இக்காலத்தில்கூட தவறாமல் இடம்பெற்றுள்ளதை காண முடியும்.

பாமாலைகளை பாடும் முறைகள்:

        பாமாலை பாடல் புத்தகங்களில் சில வார்த்தைகளுக்கு மேல் வளைவு குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்த வளைவுகளின் கீழ் இருக்கும் எழுத்துக்களை ஓர் அசையாக சேர்த்துப் பாட வேண்டும்.  (உ.ம்: பாக்கியமே என்பதை பாக்யமே எனப் பாடப்படும்)

        ஒவ்வொரு பாடல்களின் தலைப்பிலும் இராகத் தலைவர்களால் பொருத்தமாக கருதப்படும் இராகங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.  ஆனால் பக்தர்கள் பொருத்தமான வேறு இராகங்களிலும் பாடலாம்.  பாமாலையின் இராகங்கள் பல்வேறு இராக நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாக அமைந்திருக்கிறது.

        சத்தக் குறிப்புகள் போடப்படவில்லை என்றாலும் பாடும் பக்தர்கள் வார்த்தைகளின் கருத்துக்கு ஏதுவாக ஒலியை அதிகப்படுத்தியோ, குறைத்தோ பாடும்பொழுது இரம்மியமான இசையாக அமைகின்றது.


2. கைப்பிரதி பாட்டுகள்:

       கிராமத்து பாடல்களின் வடிவில் பாடப்பட்டதும், பல ஊர்களின் உள்ளூர் சபைகளிலே அவ்வூர் மக்களால் இயற்றப்பட்டு, இராகம் அமைக்கப்பட்டு பாடிய பாடல்களின் தொகுப்பு கைப்பிரதி பாட்டுகள் என்ற தலைப்பில் பிற்காலத்தில் ஒரு நூலாக வெளியிட்டனர்.

            பெரும்பாலும் கைப்பிரதிப் பாட்டுகள் பக்தி மிகுந்த, பாடும் ஆர்வம் மிக்க சபை மக்களால் இயற்றப்பெற்றதாக இருந்தது.  அவற்றில் சில திறமைமிக்க தமிழாசிரியர்களால் எழுதப்பட்டவனவாகவும் இருந்துள்ளது. 

            கைப்பிரதிப் பாட்டுகள் பெரும்பாலானவை அச்சில் ஏற்றப்படாத நிலையில், கைகளால் எழுதி ஒருவருக்கொருவர் படி எடுத்து, செவி வழி இராகம் கேட்டு பாடப்பட்டு வந்தன. 

            கிராமப்புறங்களில் ஆலயத்தில் போட்டிப் போட்டு பாடல் பாடும் சபை மக்களால் இவ்வகை பாடல்கள் இயற்றப்பட்டும், இராகம் அமைக்கப்பட்டும், நோட்டுப் புத்தகங்களில் எழுதி படி எடுத்து பாதுகாக்கப்பட்டும் வந்தன.  இவ்வகை பாடல்களை பாடத் தெரிந்த சபை மக்கள் அதை ஒரு மதிப்பாகவே (பெருமையாகவே) கருதி வந்தனர்.  திருமணம், அறுப்பின் பண்டிகை போன்ற பல ஊர் சபையோர் ஒன்றுக்கூடும் போது, ஒரு ஊர் மக்களுக்கும் மற்ற ஊர் மக்களுக்கும் பாடல் பாடுவதில் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு பெரும்பாலும் எட்டு கட்டையில் அமைந்த பாடல்களை பாடி குரலை உயர்த்தி தேவனை மகிமைப்படுத்தி வந்தனர். 

                இவ்வகை பாடல்கள் பெரும்பாலும் ஆராதனை முறைமைகளில் பாடப்படாமலிருந்தாலும், திருமணங்களின் போது மாப்பிள்ளை, பெண்ணை வாழ்த்திப் பாடுவதிலும், அறுப்பின் பண்டிகையின் போது ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஓலைப் பந்தலில் சபையோர் கூடி அமர்ந்திருந்து இசை கம்பி, சிங்கி, ஜால்ரா, கொட்டு ஆகிய இசைக் கருவிகளை பயன்படுத்தி உற்சாகத்துடன் தேவனை துதித்து பாடும்போது இப்பாடல்களை தவறாமல் பாடிவந்தனர்.

                ஏடுகளில் ஏற்றப்படாத இப்பாடல்கள், செவி வழியாகவும், நோட்டுப் புத்தகங்களில் எழுதி படி எடுப்பதன் மூலமாகவும் ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக பாடப்பட்டு வந்தது.

                கைப்பிரதிப் பாட்டுகளில் பல பாடல்கள் பா நயத்துடன் எழுதப்பட்டவையாகவும், இசை நயமிக்கதாகவும், பாடுபவர் உள்ளதில் பரவசத்தை ஏற்படுத்தும் பாடல்களாகவும் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

               

·         ஆதியும்அந்தமும் இல்லா சரணம்

·         ஓர்வெண்ணங்கி ஓர் பொன்முடி

·         கண்ணுக்குகாணும் பூவுமல்ல

·         சந்தோஷமாகவேநீ போய் வா என் தங்கையரே

·         தசமபாகங்களை நமக்குத் தா தா தா தா தா

·         தேவாஇந்த நேரம் நின்னாசீர்வாதம் தா

·         பூச்சொரிவோம்புண்ணியரே மாப்பிள்ளை பெண்மேல்

·         மங்களம்சுபமையா பூமாது மணவாளா

·         மங்களமணிமங்களமணி மங்களமணியே

·         மலரெடுத்துபூ முடித்து

·         மாம்பூமகிழம்பூ மணக்கும் ஞான மல்லிகைப்பூ

·         மேகமீதுதூதரோடிதோ இதோ

·         வாடிஅம்மா வாடி ஒரு ஞானப்பாட்டைப் பாடி

·         வாருங்கள்வாருங்கள் தோழிப் பெண்காள்

 

                இது போன்ற பல பாடல்கள் இன்றளவும் பாடப்பட்டு சிறப்பாக வருகிறது.

                கைப்பிரதிப் பாடல்களில் பலவற்றை கிறிஸ்தவ கீர்த்தனைகளிலும் கன்வென்ஷன் கீதங்களிலும் பிற்காலத்தில் இணைத்துக் கொண்டனர்.


கீர்த்தனை பாடல்கள்:

                ஆரம்பக் காலத்தில், வெளிநாட்டுப் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து அவற்றை ஆலய ஆராதனைகளில் பயன்படுத்தி வந்தனர். 

                அவற்றைப் பாடுவதில் சில சிரமங்கள் இருந்தன. ஏனென்றால் ஆங்கில ராகத்துக்கேற்ப வார்த்தைகளை பிரித்து பிரித்து படிக்கும் போது சமயத்தில் அவை கேட்பவர்களுக்கு புரியாமல் இருந்தனசபைகளில் இதைப் பாடக் கேட்ட புற மார்க்கத்தினர் கேலி பண்ணினர்.

                அதன் பின்னர் இறைவனைப் போற்ற, மனதின் உணர்ச்சிகளை இறைவனிடம் வெளிக்காட்ட, இறை வேண்டல் விடுக்க இந்திய இசையுடன் பாடப்படும் பாடல்கள் பாடத் தொடங்கினர். அவைகள் கீர்த்தனை என்றழைக்கப்பட்டன.

            கீர்த்தி என்ற வேர்ச் சொல்லிலிருந்து வந்தது கீர்த்தனை என்ற சொல்லாகும்.  இசை இலக்கியங்களான கீதம், சுரசதி, வர்ணம், ஜாவளி, கிருதி, தில்லானா, தகுபதம் - வரிசையில் ஒன்றாக கீர்த்தனை இலக்கியம் அமைகிறது.  “கீர்”, “கீர்த்தி” - என்ற சொல் புகழ் என்ற அர்த்தத்தை உடையது.  கடவுளின் அருள், மாட்சி, மகிமை, சக்தி, குணம் முதலியவைகளை பக்தர்கள் போற்றிப் புகழும் இனிய இசையுடன்கூடிய பாடலே கீர்த்தனை எனப்படுகிறது.

                கீர்த்தனைகள் பொதுவாக பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்படுவது வழக்கம்சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப் பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும். கீர்த்தனைகளில் சுரத்தை விட சொற்களுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

            வேத நாயகம் சாஸ்திரியார், சந்தியாகு ஐயர் போன்ற பக்தர்கள் ஆங்கிலப் பாடல்களையே பொருள்மாறாது கீர்த்தனைப் பாடல்களாக மாற்றினர். அப்படிப் பாடப் பட்ட ஒரு பாடல்களில் ஒன்றுதான்தேவனே நான் உமதண்டையில்இது  Nearer, my God, to Thee (உம்மண்டை தேவனே - பாமாலை) என்ற பாடலினை ஒட்டி எழுதப்பட்ட தமிழ் கீர்த்தனை ஆகும். சந்தியாகு ஐயர் தான் இதை இயற்றியவர்.

                தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைப் பாடல்கள் சபைகளில் மறுமலர்ச்சியையும் பக்தி விருத்தியயியும் உண்டு பண்ணின. வேத நாயகம் சாஸ்திரியார் போன்ற தமிழறிந்த பண்டிதர்களிலிருந்து படிப்பறியா பாமரர்கள் வரை பலர் கீர்த்தனைகளை உண்டு பண்ணினர். இன்று பல கீர்த்தனைகளை நாம் இழந்து விட்டாலும் கூட இப்போது இருப்பவற்றை பாடி பத்திரப்படுத்துவது அவசியமானது.  தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகளின் தனிச்சிறப்பு என்று சொல்ல வேண்டுமானால் அதன் எளிமையே.


(தொடரும்...)


Comments

Popular posts from this blog

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

இயேசு என்ற திருநாமத்திற்கு